தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ,பெறாத மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

தமிழகம் : தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உரிய ஆலோசனைகளை வழங்குவது மற்றும் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மறுதேர்வில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனைகளை வழங்குவது தொடர்பான விவரங்களை வழங்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதாவது, ஜூன் மாதம் 20ம் தேதியன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த உரிய ஆலோசனைகளை வழங்கும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘தமிழகத்தில் பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகளை பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது தொடர்பான பல சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.

மேலும், மாணவர்களுக்கு உதவும் வண்ணம் 14417 மற்றும் 1098 என்ற எண்களை தொடர்பு கொண்டும் சந்தேகங்களை தெரிந்து கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறையால் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அவர்களது மதிப்பெண்களை வைத்து அடுத்து என்ன படிப்பது என்று தெரியாத பட்சத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாங்களே அழைப்புகளை மேற்கொண்டு இது குறித்த ஆலோசனைகளை வழங்க இருக்கிறோம்.
இந்த தேர்வில் குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தாலோ அல்லது தேர்ச்சி அடையாமல் இருந்தாலோ இது குறித்து மாணவர்கள் வருத்தம் அடையத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.