மின் விநியோக நிறுவனத்திற்கு அபராதம் செலுத்தினேன்... முன்னாள் முதல்வர் தகவல்

கர்நாடகா: முன்னாள் முதல்வர் விளக்கம்... 71 யூனிட் மின்சாரம் திருடப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், மின் விநியோக நிறுவனத்திற்கு ரூ. 68 ஆயிரத்து 526 தொகையை அபராதமாக செலுத்தியுள்ளேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மின் திருட்டு தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனவும், மின் அலங்கார பணி ஒப்பந்தகாரரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரது தவறு தான் எனவும் முன்னாள் முதல்வர் குமாரசாமி விளக்கமளித்தார்.

கர்நாடகாவில் பெங்களூரின் ஜெ.பி., நகரில் முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி இல்லத்தில் தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் வகையில் அவரது இல்லம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதற்காக மின்சாரத்தை அருகிலுள்ள மின்கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக எடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பெங்களூரு மின் வினியோக நிறுவனம் பார்வையிட்டு விசாரணை நடத்தி குமாரசாமி மீது மின் திருட்டு வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து போலீசார் எப்.ஐ..ஆர்., பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக குமாரசாமி அளித்துள்ள விளக்கத்தில் , மின் திருட்டு நடந்துள்ளது பற்றி தனக்கு தெரியாது. மின் அலங்காரம் அமைக்கும் பொறுப்பு ஒப்பந்தகாரரிடம் ஒப்படைப்பட்டிருந்தது. அவர் தான் இச்செயலில் ஈடுபட்டுள்ளது எனது கவனத்திற்கு தெரியவந்தது.

ஒப்பந்தகாரர் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மின் விநியோக நிறுவனத்திற்கு ரூ. 68 ஆயிரத்து 526 தொகையை அபராதமாக செலுத்தியுள்ளேன் என்றார்.