நானும் கண்டிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன்; கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'ரஜினிக்கு அரசியலை விட உடல்நலம் ரொம்ப முக்கியம் என்றும், அரசியல் பற்றி ரஜினி தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம் என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களின் குரல் கண்டிப்பாக கேட்கும். நானும் கண்டிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன்.

எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது வேட்புமனு தாக்கலின்போது தெரியும் என்று கூறினார். மேலும் நல்லவர்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்றும் நல்லவர்கள் மூன்றாவது அணி வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் வியூகம் என்றும், நேர்மையானவர்கள் என பிற கட்சியினர் கூற முடியுமா? என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.