தேசிய நலனில் முடிவுகள் எடுக்குமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று குஜராத் மாநிலம் கெவாடியாவில் இருந்துகொண்டு, பயிற்சி பணிக்காலம் முடித்து, முழுமையான பணிக்குள் நுழைய உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி வழியாக உரையாற்றினார். அப்போது அவர், அவர்களை குறைந்தபட்ச அரசு, நிறைவான நிர்வாகம் என்பதை மந்திரமாக கொண்டு, தேசிய நலனில் முடிவுகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நாடு எட்ட உள்ள நிலையில், ஒரு முக்கியமான கால கட்டத்தில் அவர்கள் மக்கள் பணியில் நுழைவதாக சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு அரசு கொள்கைகளால் மட்டுமே நடத்தப்படுவது அல்ல. எந்த மக்களுக்காக கொள்கைகள் வகுக்கப்படுகின்றனவோ, அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் பெறுகிறவர்கள் அல்ல. அவர்கள்தான் உண்மையான உந்து சக்தி. எனவே அரசில் இருந்து கொண்டு, நிர்வாகத்தை நோக்கி நடைபோட வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் அவர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களது தலையீட்டை குறைத்துக்கொண்டு, சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். குஜராத் மாநிலம் கெவாடியாவில் சர்தார் வல்லப்பாய் பட்டேல் சிலைக்கு நேற்று பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.