தொடர் மழையால் தூத்துக்குடி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர்மழையால் மக்கள் அவதி... தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தரைப்பாலங்கள் மூழ்கியும், காற்றினால் மின்கம்பங்கள் சாய்ந்தும் உள்ளன. ராமநாதபுரத்தில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இ.வேலாயுதபுரம் பகுதியில் பனைமரம் சாய்ந்து 5 மின்கம்பங்கள் சேதமடைந்தன. மின்வாரிய ஊழியர்கள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

வீர காஞ்சிபுரம் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் காட்டாற்று வெள்ளத்தில் சேதம் அடைந்தது. வேடநத்தம் அருகே பாலத்தின் சர்வீஸ் சாலை அடித்து செல்லப்பட்டது. அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் சகதியில் சிக்கி செல்ல முடியாமல் தவித்தன.

வாலசமுத்திரம், வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் மழைநீர் காட்டாற்று வெள்ளம்போல் ஓடுவதால் வெங்கடாலசபுரம் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பொதிகுளத்தில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிய சேதமடைந்த நிலையில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் அதனை ஆய்வு செய்தனர்.

இதனிடையே மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் பெருகி வருகிறது. வைகை ஆற்றில் பாயும் வெள்ளப்பெருக்கால வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 10, 886 கனஅடி வீதம் நீர் வருகிறது.

தேனி மஞ்சளாறு அணை முழுகொள்ளளவான 57 அடியை தொட்டுள்ளதால், மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை 50 அடியை எட்டியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் நீரை சேமிக்க முடியாமல் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.