முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் இருந்து சிக்கிய முக்கிய ஆவணங்கள்

சென்னை: முக்கிய ஆவணங்கள் சிக்கின... சென்னையில், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அ.தி.மு.கவைச் சேர்ந்த தியாகராய நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் வடபழனியில் உள்ள அவரது வீடு உள்பட 19 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும், திருவள்ளூரில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது.

வடபழனி வீட்டில் சோதனையை முடித்துக் கொண்டு ஊழல் தடுப்புத் துறையினர் வெளியேறிய பிறகு சத்யா செய்தியாளர்களை சந்தித்தார்.

எட்டு அதிகாரிகள் கொண்டு வந்த சில ஆவணங்களை வைத்து விசாரித்ததாகவும், வீட்டின் அனைத்து அறைகளிலும் சுமார் 12 மணி நேரமாக சோதனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.