உண்மையில் பாகிஸ்தானை விட சீனாதான் மிகப்பெரிய அச்சுறுத்தல் - சரத் பவார்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் எல்லையில் பயங்கரவாத ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் ஆகியவற்றை இந்தியா இன்றுவரை எதிர்கொண்டு வருகிறது.

தற்போது சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருவதுடன், அண்டை நாடுகளாக நேபாளம் போன்றவற்றை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. லடாக் மோதலுக்குப்பின் இந்தியா - சீனா இடையே நிலவிய பதற்றம் பேச்சுவார்த்தை மூலம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான சரத் பவார், நாம் எதிரியை பற்றி சிந்திக்கும்போது, முதல் பெயராக நமது மனதில் தோன்றுவது பாகிஸ்தான்தான். ஆனால் பாகிஸ்தானை பற்றி மிகப்பெரிய அளவில் கவலைப்பட வேண்டியதில்லை. நீண்டகாலமாக சீனாவின் பலம், திட்டம், செயல் ஆகியவை இந்தியாவின் நலத்திற்கு எதிராகவே இருந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. நட்புணர்வு என்ற பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் இரு நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது. பொருளாதாரத்தில் வலிமையாகுவதில் சீனா இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.