இருதரப்பு மோதல் சம்பவம்... அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் போலீசார்

சென்னை: இருதரப்பு மோதல் காரணமாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது.


கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், கூட்டத்தை புறக்கணித்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.


அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு தாக்கி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, பூட்டியிருந்த தலைமை அலுவலகத்தை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர். இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு காவல் துறையினர் விரைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்கு அந்தப் பகுதி கொண்டு வரப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி சீல் வைத்தார். சட்டப்பிரிவு 145 இன் படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேற ஓ. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக, வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார். அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து கிளம்பினார்.


இந்நிலையில், இருதரப்பு மோதல் காரணமாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. சுமார் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.