பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு: ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்

தமிழ்நாட்டில் 68 நாட்களுக்கு பிறகு 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்கலில் நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, சங்கரன்கோவில், திருச்செந்தூர், கோவில்பட்டி உள்பட முக்கிய நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

நேற்று முதல்நாளில் அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இன்று அனைத்து பஸ்களிலும் பயணிகள் அதிக அளவில் ஏற முற்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தான் பஸ் போக்குவரத்து தொடங்கியது. நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல இன்று குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டது. காலை 7 மணிக்கு ஒரு பஸ் புறப்பட்டது. அதிலும் 60 சதவிகித பயணிகளை விட கூடுதலாகவே பயணிகள் இருந்தனர். அதன்பிறகு காலை 9 மணிக்கு அடுத்த பஸ் இயக்கப்பட்டது. இதனால் நாகர்கோவில் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

இதனால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில், மத்தியில் உள்ள இருக்கையிலும் பயணிகள் அமர்ந்தனர். இதுபோக ஏராளமான பயணிகள் நின்று கொண்டும், வாசல்படியில் தொற்றிக்கொண்டும் பயணம் செய்தனர். கண்டக்டர் பயணிகளை கீழே இறங்க வலியுறுத்தியும் அவர்கள் இறங்காததால், வேறு வழியின்றி 80 பயணிகளுடன் அந்த பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது. இதில் பல பயணிகள் முகக்கவசம் அணியாமலேயே புறப்பட்டு சென்றனர்.

நேற்று புறப்பட்ட பஸ்களில் பெரும்பாலான பயணிகளுக்கு வெப்ப பரிசோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் இன்று பயணிகள் கூட்டம் அதிகரித்ததால், எந்த பயணிகளுக்கும் வெப்ப பரிசோதனை நடத்தப்படவில்லை.

இன்று பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் நேற்றை விட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. நெல்லை பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிராம புறங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.