இந்தியாவும் அமீரகமும் இணைந்து சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும்

அமீரகம்: பேச்சு வார்த்தை... ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது அல் நஹ்யானுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரான்சில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அபு தாபி சென்ற பிரதமரை அந்நாட்டின் இளவரசர் ஷேக் காலீது அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த எடுத்த முயற்சியை பாராட்டும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய குடிமை விருதான ஆர்டர் ஆஃப் ஜயீத் பிரதமர் மோடிக்கு அதிபர் முகமது அல் நஹ்யான் வழங்கி கவுரவித்தார்.

அபு தாபியில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமருக்கு அதிகாரபூர்வ வரவேற்பும் அளிக்கப்பட்டது. அந்நாட்டின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.

அதிபர் மாளிகையில், ஷேக் முகமது அல் நஹ்யானுடன் இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பிரதமர் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இரு நாடுகளும் இணைந்து சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.