பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி இறுதிச்சடங்கு குறித்த தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரது மறைவு குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

எஸ்பிபி மறைவு குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீட்டுக்கு எஸ்.பி.பி உடல் இறுதி அஞ்சலிக்காக எடுத்து செல்லப்படுகிறது. அதன்பின்னர் எஸ்.பி.பி இறுதிச்சடங்கு அவரது தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் கொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும், சென்னை காம்தாநகர் இல்லத்தில் மாலை 5 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

எஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அவரது உடல் வைக்கப்படவிருக்கும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.