கழிப்பறைக்கு சென்ற சிறுவன் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது குறித்து விசாரணை

காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்... கழிப்பறைக்கு சென்ற சிறுவன் தீப்பற்றி எரிந்து மர்மமான முறையில் இறந்த சம்பவம் காஞ்சிபுரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், காமாட்சி காலனி ஜீவா தெருவை சேர்ந்த தாஸ் என்பவரின் மகன் சந்தோஷ்(15). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுநீர் கழிப்பதற்காக கழிப்பறைக்கு சென்று உள்ளார். சிறிது நேரத்தில் சந்தோஷ் அலறிய சத்தம் கேட்டுள்ளது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் வெளியில் வர முயற்சி செய்தனர். ஆனால் கதவு வெளியில் தாப்பாள் போட்டு இருந்ததால் அவர்களால் வெளியில் வர முடியவில்லை.

பின்பு பின்பக்க கதவு வழியாக சென்று கழிப்பறையில் எரிந்து கொண்டிருந்த சந்தோஷை மீட்டனர். பின்னர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தோஷ் நேற்று மதியம் இறந்தார்.

சம்பவத்தின் போது கழிப்பறை உட்புறம் தாப்பாள் இட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சந்தோஷுக்கு மது, கஞ்சா போன்ற பழக்கங்கள் இருந்துள்ளது. மேலும் அவர் மீது ஏற்கனவே பல வழக்குகளும் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்தது.

தீபாவளிக்கு முன் சந்தோஷூக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தகராறு செய்த இளைஞனையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.