கனடாவின் வோகன் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை

கனடா: கனடாவின் வோகன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் 20 வயது இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்வத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரம்டனைச் சேர்ந்த மோசஸ் அல்போன்சோ றைட் என்ற 20 வயது இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

என்ன காரணத்திற்காக இந்த இளைஞர் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அதிகாலை வேளையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பமொன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் தொடர்பிலான விபரங்களை போலீசாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.