வெளியிட்ட அறிவிப்புகள் குறித்த விவாதத்திற்கு நிதி மந்திரி தயாரா? - காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையிலும் சுயசார்பு இந்தியா என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடியில் திட்டம் ஒன்றை அறிவித்தார்.

இந்த திட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. அரசு பொருளாதார நிதித்தொகுப்பு என்ற பெயரில் மக்களை தவறாக வழிநடத்துகிறது. ரூ.20 லட்சம் கோடியில் திட்டத்தை அறிவித்து விட்டு, வெறும் ரூ.3.22 கோடிக்கு மட்டுமே பொருளாதார நிதித்தொகுப்பை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதம் மட்டும்தான்.

பிரதமர் மோடி தான் சொன்னதை சரியாக நிறைவேற்ற வேண்டும். பொருளாதாரத்தை மீண்டும் துவக்க ஏழை மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கைகளில் பணத்தை கொடுத்து தேவையான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும்.

பொருளாதார ஊக்குவிப்பிற்கும், வெறுமனே மக்களுக்கு கடன்களை வழங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. நிதித்துறை மந்திரி வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது தொடர்பான விவாதத்திற்கு நிதி மந்திரி தயாரா? நான் தயார். இவ்வாறு அவர் கூறினார்.