முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள், குறைந்தபட்ச ஊழியர்களின் பட்டியலை அளித்து இ-பாஸ் பெற்று இயங்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசுவெளியிட்ட அரசாணை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்றுமுதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில், சில நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி, ரயில் மற்றும் விமான நிலையங்களில் இருந்து பயணிகளை அழைத்துவர மட்டும் பிரிபெய்டு ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களை அனுமதிக்கலாம்.
அப்போதைய அனுமதிக்கு பயணிகள் வைத்துள்ள தமிழ்நாடு மின்னாளுமை முகமையால்
வழங்கப்பட்ட இ-பாஸ் போதுமானதாகும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின்
தலைமையகங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்பட அனுமதியுண்டு.
மேலும்,
இன்று முதல் 30-ம்தேதி வரை குறைந்த ஊழியர்களுடன் காலை 10 மணி முதல்
பிற்பகல் 2 மணிவரை வங்கிக் கிளைகள் இயங்கலாம்.
அந்த வங்கிகளில்
பொதுமக்களுக்கான சேவை இல்லை. ஆனால், சமையல் எரிவாயு, பெட்ரோல் விற்பனை
நிலையங்கள், அத்தியாவசிய பொருட்களின் மொத்த வியாபாரிகளுக்காக மட்டுமே
வங்கிக் கிளைகள் இயங்கும்.
தொழிற்சாலைகளில் மேலாண்மை மற்றும்
கண்காணிப்புபிரிவு அலுவலர்கள் தங்கள் போக்குவரத்துக்காக தொழில்துறை மூலம்
இ-பாஸ் பெறலாம். அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கையாள துறைமுகங்களில்
குறைந்த ஊழியர்களை பயன்படுத்த அனுமதியுண்டு.
தொலைத்தொடர்பு மற்றும் தகவல்
தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் இயங்கலாம்.
அந்த நிறுவனங்கள் ஊழியர்களின் பட்டியலை அளித்தால் இ-பாஸ் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.