அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், 2-வது முறையாக போட்டியிடுகிறார். மேலும் இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

தற்போது, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு, ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கலந்து கொண்ட அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

மாநாட்டின் முடிவில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜோ பிடன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜனநாயக கட்சியின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வது வாழ்க்கையில் தனக்கு கிடைத்த கவுரவம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஜனநாயகக் கட்சியினர் கூறுகையில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் டிரம்ப் உருவாக்கிய குழப்பங்களை சரிசெய்ய ஜோ பிடனுக்கு அனுபவமும் ஆற்றலும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, அதிபர் டிரம்ப்பை மிகத் தவறான அதிபர் என்றும் தலைமை பண்பு, நிலையான போக்குகள் அற்றவர் என்றும் மாநாட்டில் கூறியது குறிப்பிடத்தக்கது.