என் தந்தையை வைத்து அரசியல் நடத்துகின்றனர்; சிராக் பஸ்வான் வேதனை

இறந்து போன என் தந்தை ராம் விலாஸ் பஸ்வானை வைத்து ஒவ்வொருவரும் அரசியல் செய்து வருகின்றனர் என்று சிராக் பஸ்வான் கூறி உள்ளார்.

மத்திய உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த மாதம் காலமானார். டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். பீகார் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அவரின் இறப்பு அங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராம் விலாஸ் பஸ்வான் இறப்பு குறித்து விசாரணை நடத்தக் கோரி, பிரதமருக்கு இஸ்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவர் ஜித்தன் ராம் மஞ்சி கடிதம் எழுதி உள்ளார். ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிரக் பாஸ்வானை கேள்விக்குள்ளாக்கும் பல சந்தேகங்கள் உள்ளதால் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இதுபற்றி குறித்து சிராக் பஸ்வான் கூறியதாவது: ஒரு மகனைப் பற்றி இதுபோன்ற விஷயங்களைப் பேசுபவர்கள் தங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும். தொலைபேசியில் என் தந்தையின் உடல்நிலை குறித்து மஞ்சி அவர்களிடம் சொல்லியிருக்கிறேன், ஆனாலும் அவர் ஒருபோதும் என் தந்தையைப் பார்க்க வரவில்லை.

மஞ்சி இப்போது என் தந்தையைப் பற்றி அக்கறையாக இருப்பதுபோல பேசுகிறார். ஆனால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஏன் அவரைப் பற்றி இவ்வளவு அக்கறை காட்டவில்லை?

எல்லோரும் இப்போது இறந்த என் தந்தையை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர் உயிருடன் இருந்தபோது அவரைப் பற்றி யாரும் ஏன் கவலைப்படவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.