எதிர்கட்சிகள் தொடர் அமளியால் மறு தேதி குறிப்பிடாமல் கேரளா சட்டசபை ஒத்தி வைப்பு

திருவனந்தபுரம்: கேரளா சட்டசபையில் அமளி... கேரளாவில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. கேரள சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரை வரும் 30ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்டசபையில் தாங்கள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன் சபாநாயகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது பேரவை காவலர்கள் போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

இந்த மோதலில் 4 எம்எல்ஏக்கள் காயமடைந்தனர். இதனிடையே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பு எம்எல்ஏக்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் அமளியால் கடந்த சில நாட்களாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சட்டசபை தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், ‘எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதால், இன்று (நேற்று) முதல் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் அவையின் நடுவே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.

இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே விவாதம் இன்றி 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஷம்சீர் அறிவித்தார். இதையடுத்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.