அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய தலைவர்கள், பிரபலங்கள் பிரார்த்தனை.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கொரோனா தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் பூரண குணமடைய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். இதுகுறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில், அமிதாப் பச்சன் வலிமை பெறவும் மற்றும் விரைவாக குணமடையவும் பிரார்த்திக்கிறேன். தயது செய்து விரைவில் குணமடையுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நீங்கள் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். உங்களுடன் கோடிக்கணக்கான பிரார்த்தனைகள் உள்ளன என பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், விரைவாக குணமடைய நாங்கள் வாழ்த்துகிறோம் எனவும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் நலம் விசாரித்துள்ளனர்.