மேகமலையில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு; வனத்துறையினர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை சுற்றுலாத்தலமாகும். சுற்றுலாத்தலமான மேகமலைக்கு, கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின்னர் தற்போது மீண்டும் சுற்றுலாபயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை மேகமலையில் 9-ம் மைல் என்னும் இடத்தில் தலையில் ரத்த காயத்துடன் சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடந்தது.

இதுகுறித்து பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேகமலை வன உயிரின சரணாலய பாதுகாவலர் சச்சின் போன்ஸ்லே துக்காராம், உதவி வனப்பதுகாவலர் குகனேஷ், மேகமலை வனச்சரகர் சதீஷ்கண்ணன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

மேலும் கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், சிறுத்தை குட்டியை பரிசோதனை செய்தனர். சிறுத்தை குட்டி வாகனம் மோதி இறந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்து கிடந்தது சுமார் ஒரு வயதுடைய பெண் சிறுத்தைக்குட்டியாகும். மேலும் மேகமலைக்கு இரவில் சென்ற வாகனங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.