மதுபான கடையில் கொள்ளை; ஒருவர் கைது

புதுவை 100 அடி ரோட்டில் உள்ள மதுபான கடையில் மர்ம நபர்கள் கடந்த 15-ந்தேதி இரவு கடையின் ஜன்னல், கதவினை உடைத்து கடைக்குள் புகுந்து விலை உயர்ந்த மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

மதுக்கடையின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மனோகர்(வயது 58) என்பவர் தனது தங்கை மகன்களான திருமால் நகரை சேர்ந்த செல்வகணபதி, பிரான்சுவா ஆகியோருடன் சேர்ந்து மதுக்கடையில் புகுந்து திருடியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மனோகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 118 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாகியுள்ள செல்வகணபதி, பிரான்சுவா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் பாராட்டினார்கள்.