காதலுக்கு சம்மதம் தெரிவித்தும் காதல் ஜோடி தற்கொலை!

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான சவுரிநாதன் என்பவருக்கு கிலாரா, சோபியா (வயது21) என்ற 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சோபியாவின் வீட்டின் அருகே அவரது உறவினரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த்ராஜ் (22) உட்பட 3 மகன்கள் உள்ளனர்.

சோபியாவும், ஆனந்த்ராஜூம் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வதாக அவர்களது வீட்டில் தெரிவித்தனர். உறவினர்கள் என்பதால் ஆனந்தராஜூக்கும், சோபியாவுக்கும் கொரேனா பிரச்சனை முடிந்தபிறகு திருமணம் செய்து வைப்பதாக இருவீட்டார் பெற்றோர்களும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அரூர் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் ஆனந்தராஜூம், சோபியாவும் பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. இதனை பார்த்தவர்கள் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த வந்த சவுரிநாதன், ராஜா குடும்பத்தினர் பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த அரூர் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது:- ஆனந்த்ராஜ், சோபியாவின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்வில்லை. கொரோனா பிரச்சனை முடித்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். ஆனால், அவசரப்பட்டு காதல் ஜோடி இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்தது.