ஆந்திராவில் தனியார் பள்ளிகளை தவிர்த்து அரசு பள்ளிகளில் சேரும் லட்சக்கணக்கான மாணவர்கள்

ஆந்திராவில் தனியார் பள்ளிகளை உதறிவிட்டு லட்ச கணக்கில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் சேர்க்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கல்வி சீர்திருத்த திட்டத்தின்படி இந்த ஆண்டில் கூடுதலாக 2.68 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேருவதை விட, அரசுப் பள்ளிகளில் சேருவதற்காக பதிவுசெய்துள்ளனர்.

அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 42.46 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி களில் சேர பதிவு செய்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுவே, கடந்த 2019ஆம் ஆண்டில் 39.78 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தனர். எனவே இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க 2.68 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பதிவு செய்துள்ளனர். இதனால் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 42.46 லட்சமாக உயர்ந்தது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, புதிதாக 'ஜெகணண்ணா அம்மவொடி', 'ஜெகணண்ணா வித்யாகானுகா' போன்ற புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.
இந்த திட்டங்களால் அரசு பள்ளிகளில் சிறப்பான கல்வியை கொடுப்பதுடன் அனைத்து வசதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர பதிவு செய்துள்ளனர் என முதலமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது
முந்தைய தெலுங்குதேசம் ஆட்சியின் அலட்சியப் போக்கால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கினர். இதனால் அரசுப் பள்ளிகளில் அதிகமாக மாணவர்களின் சேர்க்கை இல்லாமல் போனது எனவும் ஆளும் கட்சியினர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.