ஆன்லைன் மூலம் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரிடம் பல லட்சம் மோசடி

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள இலந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த உமாசங்கர்(வயது 67) ஸ்டேட் பாங்கில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது வங்கி கணக்கில் ரூ.7 லட்சம் இருப்பு வைத்திருந்தார். இவர் தனது செல்போன் மூலம் வங்கி கணக்கை ஆப்பரேட் செய்யவும் ஏற்பாடு செய்து வைத்து இருந்தார்.

சம்பவத்தன்று தனது செல்போன் ஆப் மூலம் தனது வங்கி கணக்கில் உள்ள சிறிதளவு பணத்தை எடுப்பதற்காக உள் நுழைந்தார். எந்த அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்ப வேண்டும், எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்று இவர் தகவல் தெரிவிப்பதற்குள், தானாகவே அந்த ஆப் செயல்படத் தொடங்கி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உமாசங்கர் செல்போன் பரிவர்த்தனையை நிறுத்தி விட்டார். அதன் பிறகு அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணம் எடுக்க முயன்றார். அப்போது அவரது கணக்கில் பணம் இல்லை என்று வந்தது. இதனால் உமாசங்கர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

வங்கி நிர்வாகமோ, நீங்கள் நுழைந்த ஆப் எங்களுக்கு உரியது அல்ல என்று கைவிரித்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாசங்கர் தேவர்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் மோசடி செய்த நபர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.