கூட்டணிக்குள் பிளவுப்படுத்தும் அமைச்சர்கள்; ஹெச்.ராஜா விமர்சனம்

கூட்டணியில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்களா என சந்தேகம் எழுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

மதுரையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முரண்பாடாக பேசுவது அமைச்சர் செல்லூர் ராஜுவின் வாடிக்கையாகி வருகிறது. அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் எல்லை மீறி பேச வேண்டாம். கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக அரசை நாள் ஒருபோதும் விமர்சனம் செய்ததில்லை.

அமைச்சர்கள் பாஜகவை விமர்சனம் செய்து பேசுவது கூட்டணிக்குள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.