கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க மாமியார் முயற்சி: போலீசில் மனைவி புகார்

தன்னுடைய கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முயற்சிப்பதாக டிவி சீரியலில் துணை நடிகையாக நடிக்கும் ஷீலா என்பவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஷீலா. டிவி சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். சேலம் மாவட்டம் இடைப்பாடி காவல் நிலையத்தில் இவர் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் ஷீலா தெரிவித்துள்ளதாவது:

இடைப்பாடி வெள்ளாண்டி வலசு சேர்ந்த என்பவருக்கும், எனக்கும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்த போது பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் எனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கணவர் என்னுடன் வாழ மறுக்கிறார் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். எனவே எனது கணவரை என்னோடு சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்யும் அவரது தாய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புகார் மனுவுடன் திருமணத்தின் போது தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை ஷீலா போலீசாரிடம் ஆதாரமாக கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் சவுந்தரராஜனை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர்.