எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா நெகட்டிவ்...காலை 10.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்

காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் அறிகுறியற்ற கொரோனா பாதிப்புடன் கடந்த 10-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடலில் கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து அவ்வப்போது பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 10.44 மணிக்கு அவருடைய சளி மாதிரியை எடுத்து மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்தது. எனினும் ஏற்கனவே அவரது உடலில் கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால் நுரையீரலில் சளி தொந்தரவு ஏற்பட்டு, நிமோனியா தொற்று தீவிரமாக உருவெடுத்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி , தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காலை 10.30 மணி வரை வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்குமேல் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது.

மதியம் 2 மணிக்கு மேல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை 10 மணி அளவில் அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.