தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது

சென்னை: நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இனிப்புகள் வழங்கி மக்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே இதனால் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தினவிழா களைகட்டி காணப்பட்டது.

இதை அடுத்து சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மனுநீதி சோழன் சிலை அருகே உள்ள கொடிகம்பத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மூத்த நீதிபகள் துரைசாமி, டி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஐகோர்ட்டில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு தலைமை நீதிபதி தங்க பதக்கங்களை வழங்கி பாராட்டினார். சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, துணை மேயர் மகேஸ்குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். மாநகர போக்குவரத்து கழக பல்லவன் இல்ல வளாகத்தில் மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேனாம்பேட்டையில் உள்ள இந்திய தணிக்கை அலுவலகத்திலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.