தேவைப்படின் கடற்படை கப்பல்களும் அனுப்பப்படும்... மத்திய அரசு தகவல்

இஸ்ரேல்: கப்பல் படையும் அனுப்பப்படும்... இஸ்ரேலில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ள நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இதற்காக சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் இந்திய கடற்படை கப்பல்கள் அனுப்பப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு முதல் சிறப்பு விமானம் இன்று இயக்கப்படவுள்ளது. இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து, இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் விமானம் புறப்படும் என்றும், இதில் சுமார் 230 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த விமானத்தில் இடம் கிடைக்காதவர்கள் அடுத்தடுத்து இயக்கப்படும் விமானங்களில் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.