தமிழகத்தில் நாளை நீட் தேர்வு... முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் நாளை நீட் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேசிய தேர்வு முகமை அமைப்பு திட்டமிட்டபடி நாளை (13-ம் தேதி) நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மதுரை, சேலம், நெல்லை உள்பட 14 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வை 1,17,990 மாணவர்கள் எழுதவுள்ளனர். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும், தேர்வு எழுத வருகை தரும் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேர்வு எழுதும் வகையிலும் ஒவ்வொரு மையத்திலும் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்கள். மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துவர வேண்டும்.

தேர்வு மையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி, கைகளை சுத்தம் செய்வதற்கு சோப்பு, தண்ணீர் அல்லது சானிடைசர்கள் வைக்கும் பணி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து மேஜைகள் மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணி போன்ற முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தேர்வு எழுத வருகை தரும் மாணவ-மாணவிகள் வழக்கமான விதிமுறைகளைப் பின்பற்றவும், கொரோனா கால விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.