விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது - விவசாய சங்க பொது செயலாளர்

பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது. விவசாயிகள் நலனை முன்னிட்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் கடந்த நவம்பர் 26-ம் தேதி டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு மாநில விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நீண்டகால போராட்டத்தினை கவனத்தில் கொண்டு, விவசாயிகள் 6 மாத காலத்திற்கு தேவையான உணவு பொருட்களையும் தங்களுடன் கொண்டு சென்றுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு காணப்படும் வகையில், மத்திய வேளாண் மந்திரி என்.எஸ். தோமர் தலைமையில் கடந்த 1 மற்றும் 3-ம் தேதிகளில் அரசு சார்பிலான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. மத்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப வரும் 9-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என கூறப்பட்டது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியது. மேலும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்தனர். அதன்படி அமைதியுடன் பந்த் நடந்து முடிந்தது. இந்நிலையில் விவசாய தலைவர்கள் அரசுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தை பற்றி உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்தினர்.

இதுகுறித்து, அனைத்திந்திய விவசாய சபையின் பொது செயலாளர் ஹன்னன் மொல்லா கூறும்பொழுது, விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாது. விவசாய தலைவர்களிடம் அரசின் முன்மொழிவு ஒன்று வழங்கப்படும் என எங்களிடம் மத்திய மந்திரி கூறினார். அரசின் முன்மொழிவை பற்றி விவசாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்துவார்கள். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை. டெல்லி மற்றும் அரியானாவின் சிங்கு எல்லை பகுதியில் பகல் 12 மணியளவில் விவசாயிகளிடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.