நீருக்கடியில் கதிரியக்க சுனாமி சோதனை நடத்திய வடகொரியா

பியாங்யாங்: கதிரியக்க சுனாமி சோதனை... நீருக்கடியில் கதிரியக்க சுனாமி சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது: வடகொரியாவின் தெற்கு ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை ஏவினோம். இது 59 மணி நேரத்திற்கும் மேலாக 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் பயணித்து அதன் கிழக்கு கடற்கரையில் வெடித்தது.

இதன் மூலம் கதிரியக்க சுனாமியை உருவாக்கினோம். இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதில் வடகொரிய தலைவர் கிம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சோதனையில் வடகொரியா எந்த வகையான ஆயுதத்தை பயன்படுத்தியது என்பது வெளியாகவில்லை.

வடகொரியாவின் இந்த சோதனையானது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தென் கொரிய அதிபர் யுன் சுக்-யோல், “இதுபோன்ற ஆத்திரமூட்டும் செயல்களுக்கு வடகொரியா விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார்.

கதிரியக்க சுனாமி என்பது அணு ஏவுகணைகளை கடலுக்கு அடியில் ஏவும்போது, குறிப்பிட்ட தூரம் பயணித்து கடலில் வெடித்து கதிரியக்க அலைகளை உருவாக்குகிறது. இவை கதிரியக்க சுனாமிகள் எனப்படும்.

கொரிய தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா-தென்கொரிய படைகள் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இம்மாத இறுதியில் இரு நாடுகளும் பெரும் ராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வடகொரியா மீண்டும் ஆயுத சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த செயல் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.