ஆம்னி பேருந்து கட்டணம் மாற்றம்

சென்னை : தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் அரசு நிர்ணயித்துள்ளதை தாண்டி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. ஏற்கனவே மக்கள் பொருளாதார சரிவால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நேரத்தில் தனியார் பேருந்துகளில் பயண கட்டணம் உயர்த்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது. வழக்கமாக பண்டிகை கால விடுமுறை தினங்களிலும், பிற அரசு விடுமுறை நாட்களிலும் பேருந்துகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணிப்பர்.

சிலர் முன் கூட்டியே அரசு பேருந்துகளில் பதிவு செய்து பயணிப்பர். சிலர் பயணத்தை கடைசி நேரத்தில் திட்டமிடுவார்கள். இவர்களுக்கு அரசு பேருந்துகளில் பெரும்பாலும் இடம் கிடைக்காது. அதனால் இவர்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்கின்றனர்.

இதனை பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து பயணிகள் அரசிடம் புகார் தெரிவித்தனர்.அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த கட்டண கொள்ளை தொடர்ந்து நடந்து தான் வருகிறது. இந்நிலையில் பயணக் கட்டணம் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கடந்த 27-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தனியார் பேருந்துகளில் கட்டணத்தை குறைக்கும்படி வலியுறுத்தினார். இது பற்றி பரிசீலிக்கப்பட்டு தற்போது பேருந்துகளின் தரம் மற்றும் பயணிக்கும் தூரத்தை பொறுத்து 10 முதல் 22 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.