மாங்குளம் நகர்பகுதியில் யானை தாக்கி ஒருவர் பரிதாப பலி

யானை தாக்கி ஒருவர் பலி... மாங்குளம், மல்லாவி வீதியில் மாங்குளம் நகர்பகுதியில் இருந்து முதலாவது கிலோமீட்டர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தச்சு வேலைக்காக முல்லைத்தீவு - மல்லாவி, கொல்லவிளாங்குளம் பகுதிக்கு வருகை தந்து வேலை புரிந்து வந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பும் நோக்கில் கொடிகாமம் நோக்கி சென்றுள்ளார்.

இவ்வாறு கொடிகாமம் நோக்கி செல்வதற்காக பயணத்தை ஆரம்பித்த நபர் மாங்குளம் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அளவில் வருகை தந்த போது இரவு 10.30 மணியளவில் திடீரென வீதியை குறுக்கறுத்த யானையுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த யானையானது மோட்டார்சைக்கிள் மீதும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் மீதும் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 37 வயதுடைய யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியை சேர்ந்த ஆனந்தராசா விஜியானந்தன் என்ற நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் நேற்றிரவு மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த இடத்திற்குச் சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.