நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டதாக ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதன்படி, தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில், ரஜினிகாந்த் ஆடம்பர காரில் பயணம் செய்வது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. போயஸ் தோட்டத்தில் இருக்கும் தனது வீட்டில் இருந்து கேளம்பாக்கம் அருகில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு சென்றிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கேளம்பாக்கம் வரை சென்று வர ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கினாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதன்பின், இ பாஸ் இல்லாமல் பயணித்ததற்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கும் தகவல் அடங்கிய ட்விட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, இந்த வைரல் ட்விட் ரஜினிகாந்த் பெயரில் இயங்கி வரும் போலி ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து பதிவிடப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த பயணம் பற்றிய சர்ச்சைக்கு ரஜினிகாந்த் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் கூறுகையில், ரஜினிகாந்த் இ பாஸ் பெற்ற பின்பே பயணம் செய்ததாக தெரிவித்தார். அதன்படி, வைரலாகும் ட்விட்டர் பதிவை ரஜினிகாந்த் பதிவிடவில்லை என்பது தெரிய வந்துவிட்டது.