வங்கி கிளைகளில் முழுமையான அளவில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து வங்கி கிளைகளில் 100 சதவிகித ஊழியர்களும் பணியாற்ற வேண்டும் என்ற மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் 50 சதவிகித ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டுமென்று தலைமை செயலாளருக்கு அகில இந்திய அதிகாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வங்கி ஊழியர்களின் நலன் கருதி சேவை வழங்குவதில் நேர கட்டுப்பாடு உட்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே சேவை வழங்குதல், ஊழியர்களுக்கு
ஒருநாள் விடுப்பு, ஒருநாள் பணி என சுழற்சி முறையில் 50 சதவிகித
பணியாளர்களுடன் வங்கிகள் இயங்கி வந்தன.
இந்த சூழலில் ஜூலை 31 ஆம்
தேதி, மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.
மொகந்தா வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகள் 100 சதவிகித ஊழியர்களுடன்
வழக்கமான நேரத்துடன் செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே
வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான சேவையையும் வழங்க வேண்டும்.
இந்த
மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் வங்கிக்
கிளைகள் அரசின் உத்தரவை மதித்து அன்றைய தினம் செயல்படாது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள வங்கி கிளைகள் ஏற்கனவே பிறப்பித்த
உத்தரவின்படி செயல்பட வேண்டும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில்
வசிக்கும் வங்கி ஊழியர்கள் பணிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றாலும்
அவர்கள் இது தொடர்பாக தங்கள் உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
வங்கிகளில் கூட்டம் சேருவதைத் தடுக்கும் பொருட்டு ஏடிஎம், ரூபே கார்டுகள்
மூலம் பணம் எடுப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
வங்கிகள்
100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ் கணேசன்
தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார்.
வங்கியாளர்
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 100
சதவிகித ஊழியர்களுடன் வழக்கமான சேவையில் ஈடுபட வேண்டுமென்று செயல்பாட்டு
வழிமுறையை வெளியிட்டுள்ளது. இது, தமிழக அரசின் உத்தரவை மீறுவதாக உள்ளது.
100 சதவிகித ஊழியர்களுடன் வழக்கம்போல் வங்கிகள் செயல்பட்டால், தொற்று அதிக
அளவில் பரவ வாய்ப்பு ஏற்படும். எனவே கேரளா, கர்நாடகம், மேற்கு வங்கம்
மாநிலங்களைப் போன்று வங்கிகளில் 50 சதவிகித ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர
அனுமதிக்க வேண்டும்.
அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை மற்றும்
பணி நேரத்தை காலை 11 மணி முதல் 2 மணி வரையாக குறைக்க வேண்டும். வங்கி சேவை
அத்தியாவசிய தேவை என்பதால் அதன் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய
வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.