புழல் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தம்

வங்கக்கடலில் உருவான புயல் மற்றும் தொடர்ந்து பெய்த மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியான புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

புழல் ஏரியின் மொத்த உயரம் 21.2 அடி ஆகும். நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த 4-ந் தேதி புழல் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி ஏரிக்கு 150 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது.

இதையடுத்து புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். தற்போது ஏரியில் 3,054 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.