ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி

முட்டல் ஏரி ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் இருந்து வடக்கே உள்ளது. இந்த ஏரியில் படகு போக்குவரத்து இருந்து வந்தது. கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்த ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் ஏரியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கும் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் முட்டல் ஏரியில் படகு சவாரி செய்வதற்கும், ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான அனுமதியை ஆத்தூர் கோட்ட வன அலுவலர் முருகன், வனச்சரகர் அன்பழகன் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

அதே நேரத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்து படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த தகவலை அறிந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு வரத்தொடங்கி உள்ளனர். மேலும், நேற்று விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.