தளர்வுகளுடன் கூடிய 7ம் கட்ட ஊரடங்கு நள்ளிரவு முதல் அமுலானது

7ம் கட்ட ஊரடங்கு... தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், கூடுதல் தளர்வுகளுடன் கூடிய 7ம் கட்ட ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்படுள்ள ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் 6ம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேலும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை ஆகஸ்ட் மாத இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.

அதன்படி, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.தொடர்ந்து, பொதுப்போக்குவரத்திற்கான தடை ஆகஸ்ட் மாதத்திலும் தொடரும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மின்சார மற்றும் மெட்ரோ ரயில்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை திறக்கவும் அனுமதி இல்லை. மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சாரநிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை தொடர்கிறது.
சென்னையில் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து வித பொருட்களையும் விநியோகிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.