பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது!

12 ஆம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை நாளை மறுநாள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள் (மார்ச் 24-ந்தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிலர் பங்குபெற முடியவில்லை என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை மறுதேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்ததும், மறுதேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு மையத்துக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு மறுதேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தற்போது நடந்து வரும் நிலையில் நாளை மறுநாள் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு 800 பேர் ஹால் டிக்கெட்டுகளை பெற்றிருந்த நிலையில், 500 பேர் தேர்வுக்கு வரவில்லை 300 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர்.