சீனாவின் வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் வடகிழக்கு பகுதியில் ஹூபெய் மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள டாங்க்சன் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் டாங்க்சன் நகரின் கேய் மாவட்டத்தை மையமாக கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் பீஜிங் உள்பட டாங்க்சன் நகருக்கு அருகே உள்ள பல்வேறு நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.38 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் போது வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்து அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் மீட்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1976ம் ஆண்டு இதே டாங்க்சன் நகரில் ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.