மருத்துவர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் பலி எண்ணிக்கையை உயர்த்துகின்றனர் - அதிபர் டிரம்ப்

மிச்சிகன் மாநிலம் வாட்டர்போர்டு நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களில் உள்ள நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், யாராவது கொரோனாவால் உயிரிழந்தால் நமது மருத்துவர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும், அதனால் தான் மருத்துவர்கள் பலி எண்ணிக்கையை உயர்த்துகின்றனர். ஆனால், ஜெர்மனி உள்பட பல நாடுகளில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அவர்கள் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது என கூறினார்.

அமெரிக்காவில் தேசியளவில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் அவசர சிகிச்சையில் சிகிச்சை பெறுகின்றனர். உலகில் எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் தான் அதிக கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது, அதனால் தான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கிறது என்று டிரம்ப் கூறினார்.

கடந்த சனிக்கிழமை டிரம்ப் பேசும்போது, மருத்துவர்கள் அதிக பணம் பெறுவதாகவும், மருத்துவமனைகளுக்கு அதிக பணம் கிடைப்பதாகவும் கூறினார். மருத்துவர்கள் தாங்கள் சிகிச்சையளிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகக் கூறியதற்கு அமெரிக்க மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் டிரம்ப் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.