ஊழலை ஆதார் கார்டு மூலம் முறியடித்ததாக பிரதமர் மோடி பெருமிதம்

ஜபல்பூர்: ஊழல் முறியடிப்பு... காங்கிரஸ் ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழலை ஆதார்கார்டு, மொபைல் மற்றும் ஜன்தன் வங்கிக்கணக்குகள் மூலமாக முறியடித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி காங்கிரஸால் ஊழல்வாதிகளின் பெட்டகங்களை நிரப்பியதாக சாடிய மோடி, 2014ம் ஆண்டு ஊழலை வேரறுக்க பாஜக ஸ்வச்தா இயக்கத்தைத் தொடங்கியதாக நினைவு கூர்ந்தார்.தொழில்நுட்ப உதவியால் 11 கோடி போலியான பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி ஏழைகளுக்கான தொகையை வேறு யாரும் அபகரித்துவிடக்கூடாது என்று பாஜக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தார்.

ஊழலை ஒழிக்கும் திரிசக்திகளாக மொபைல் , ஆதார், ஜன்தன் ஆகியவற்றைப் பயன்படுத்தியதாகவும் மோடி தெரிவித்தார். இதன் காரணமாக சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் தவறான நபர்களின் கைகளுக்குப் போய்ச் சேராமல் ஏழைகளுக்கு முறையாக சேர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.