பிரதமர் மோடி இன்றும், நாளையும் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம்

கவுகாத்தி: 2 நாள் சுற்றுப்பயணம் ... பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணிகள் ஆட்சியை தக்கவைத்துள்ளன. அந்த 3 மாநிலங்களிலும் இன்றும், நாளையும் புதிய அரசுகள் பதவியேற்கின்றன.

இதனை அடுத்து இந்த பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். எனவே பயணத்தின் முதற்கட்டமாக இன்று காலை அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தி செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து நேரடியாக மேகாலயா தலைநகர் சில்லாங் செல்கிறார். அங்கு முதல்-மந்திரி கான்ராட் கே சங்மா தலைமையில் புதிய அரசு பதவியேற்கும் விழாவில் மோடி பங்கேற்கிறார்.


அதனை தொடர்ந்து அங்கிருந்து நாகாலாந்து செல்லும் மோடி தலைநகர் கோஹிமாவில் நடைபெறும் புதிய நாகாலாந்து அரசாங்கத்தின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலையில் மீண்டும் அசாம் திரும்பும் பிரதமர் மோடி கவுகாத்தியில் நடைபெறும் அசாம் மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதை தொடர்ந்து நாளை திரிபுரா செல்லும் மோடி அங்கு தலைநகர் அகர்தலாவில் நடைபெறும் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். மேற்கூறிய தகவல்கள் அனைத்தையும் அசாம் சுகாதார மந்திரி கேசப் மஹந்தா நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.