ஊழல், வாரிசு அரசியல் நாட்டை விட்டு வெளியேற பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி: பிரதமர் மோடி வலியுறுத்தல்... ஊழல், வாரிசு அரசியல், சமரச அரசியல் ஆகியவை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது.

இதனை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், காந்திஜி தலைமையிலான வெள்ளையனே வெளியேறு போராட்டம், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெற முக்கிய பங்காற்றியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் பங்கு கொண்ட மக்களுக்கு மரியாதை செலுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியா தற்போது ஒருமித்த குரலில், ஊழலே நாட்டை விட்டு வெளியேறு, வாரிசு அரசியலே நாட்டை விட்டு வெளியேறு, சமரச அரசியலே நாட்டைவிட்டு வெளியேறு என்று கூறுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.