கொடைக்கானலில் தனியார் நிறுவன தற்காலிக ஹெலிகாப்டர் சேவை

ஹெலிகாப்டர் சேவை... கொடைக்கானலில் தனியார் நிறுவனம் முதன்முறையாக ஹெலிகாப்டர் சேவையை தற்காலிகமாகத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டரில் பறந்தவாறு கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிக்கலாம்.

கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் அதிகமாக உள்ளன.சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தற்போது தனியார் ஹெலிகாப்டர் சேவை தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்நிறுவனத்தைச் சேர்ந்த ஹரிஹரன் கூறியது:

இந்த ஹெலிகாப்டர் நிறுவனத்தை ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்கள் கோயம்புத்தூரில் நடத்தி வருகின்றனர். கொடைக்கானலில் முதல்முறையாக ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளோம். அவசர கால மருத்துவ சேவைக்கும் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கொடைக்கானலில் தற்காலிகமாக நவம்பர் 3-ம் தேதி வரை ஹெலிகாப்டர் இயக்கப்பட உள்ளது. இதில் மொத்தம் 6 பேர் பயணம் செய்யலாம். ஒருவருக்கு ரூ.6,000 கட்டணம்.

ஹெலிகாப்டரில் 15 நிமிடங்கள் பறந்தவாறு கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிக்கலாம். ஏரி, கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா ஆகியவற்றின் மேற்புறத் தோற்றத்தைக் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.