தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் அனைத்து துறைகளும் முடங்கியது. அதே போல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை வருகிற 11-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்து இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்த வேண்டுமா? என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின்போது பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் நடைபெற இருந்து பொதுத்தேர்வுகளை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.