முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. பின்னர், நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல் பல்வேறு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். மேலும், நாடு முழுவதிலும் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டது.

அந்தந்த பகுதி நிர்வாகிகள் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர். இந்திரா காந்தியின் புகைப்படங்களையும், அவரது பணிகளை நினைவு கூர்ந்தும் சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

மேலும், இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியையும், தற்போதைய பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பலர் தங்கள் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர். இது தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.