முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளரின் உறவினர் வீட்டில் ரெய்டு

சென்னை: ஐ.டி., ரெய்டு... அதிமுகவினருக்குத் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த சில தினங்களாக ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று (ஜூலை 10) எஸ்.பி. வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் குமாரின் சகோதரர் வசந்தகுமார் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

அதிமுகவை மையமாக வைத்து பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்துவரும் சூழலில் வேலுமணியின் ஆதரவாளரான வடவள்ளி சந்திரசேகருக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை 6 தொடங்கி மூன்று நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைபற்றியது.

அதைத்தொடர்ந்து சந்திரசேகரின் நண்பரும் கே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சந்திரபிரகாஷுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை தொடங்கியது. 5ஆவது நாளாக கே.சி.பி.நிறுவனத்தில் இன்று (ஜூலை 10) சோதனை நடைபெறுகிறது.


இந்நிலையில் நேற்று இரவு முதல் கோவை குனியமுத்தூர் மைல்கல் பகுதியில் வசித்துவரும் வசந்தகுமார் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இவர் நமது அம்மா வெளியீட்டாளர் சந்திரசேகரின் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே சந்திரசேகர், சந்திர பிரகாஷ் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் வசந்தகுமாரின் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் அவரது வீடு முன்பு இரவு முதலே அதிமுகவினர் வந்து செல்லும் வண்ணம் இருக்கின்றனர்.

நாளை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் சென்னையில் தங்கி வேலுமணி முன்னின்று செய்துவரும் நிலையில் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது ரெய்டு நடத்தப்படுவது அதிமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சோதனைகளுக்கு ஓபிஎஸ் தரப்பினர் தான் காரணம். அவருக்கும் திமுகவுக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, இன்பதுரை உள்ளிட்டோர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.