300 விசைப்படகுகளில் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக சென்னை வானிலை மையம் மூலம் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 24-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இடையில் 29-ந் தேதி மட்டும் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் மறுநாளே புரெவி புயல் காரணமாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.‌ இதையடுத்து கடலுக்கு சென்றவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்.

இரண்டு வாரமாக கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாம்பன் அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மழை கொட்டியது.

இரண்டு வாரங்களுக்குப் பின் இன்று ராமேசுவரம், பாம்பன் பகுதியில் கடல் இயல்பு நிலையில் காணப்பட்டது. இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்கு மீன்வளத்துறையும் அனுமதி அளித்தது. அதன்படி ராமேசுவரம் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் மீண்டும் பரபரப்பாக காணப்பட்டது. பாம்பன் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.